| |
Mon, August 16, 2010 18:45 | |
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் தமிழை தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த அறிஞர்கள் பலர். இவர்கள் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர்கள். இவர்களால் தமிழ்மொழி செழுமை பெற்று வளர்ந்ததென்றே கூறலாம். சில பாடல்களை கேட்கும்போது நாமும் பாடவேண்டும் என்ற ஊக்கத்தை தர வல்லன. இவ்வாறான பாடல்களை தந்தவர்களுள் தங்கத்தாத்தாவும் ஒருவர். இவர் ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி என்னும் ஊரில் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி வன்னிய சேகர முதலியார் வழித்தோன்றலாய் வாழ்ந்த கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை என்போருக்கு திருமகனாய் பிறந்தார். ஆரம்பத்தில் தனது கல்வியை அருணாசல உபாத்தியாயரிடமும், தனது தந்தையிடமும் திறம்பட கற்ற இவர் பதினைந்தாவது வயதில் பல பாடல்களை தாமாகவே ஆக்கத் தொடங்கினார். வட்டுக்கோட்டையில் உள்ள சின்னத்தம்பி ஆசிரியரும் சோமசுந்தரப் புலவரும் சேர்ந்து அவ்வூரில் ஒரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கினார்கள். அப்பாடசாலையில் புலவர் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், இதிகாசம் போன்ற பாடங்களையும் கற்பித்தார். இவர் தமிழையும், சைவசமயத்தையும் பல நற்பணிகள் செய்து மேன்மையடையச் செய்தார். தனது 28வது வயதில் இல்லற வாழ்வில் இணைந்து ஐந்து பிள்ளைகளை பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தார். இவர் யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்னரே பல தனிப்பாடல்களை பாடினார். இதனால் இவரை \'வரகவி\' என்று அழைத்தனர். சிறுவர்களுக்கெனப் பல கதைப்பாடல்களையும் பாடியுள்ளார். \'தாடி அறுந்த வேடன்\', \'எலியும் சேவலும்\' என்ற கதைப்பாடல்கள் இவரின் கவிதை ஆற்றலை பறைசாற்றுவதுடன் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பன. இவை சிறுவர்களால் நாடகமாகவும் நடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றை கவிதைநாடகம் என்றும் கூறுவர். சோமசுந்தரப் புலவர் சிறுவர்களிற்காக ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி முதலான பல பாடல்களை பாடியுள்ளார். இவர் சிறுவர்களுக்காக பாடிய பாடல்கள் \'சிறுவர் செந்தமிழ்\' என்ற பெயரில் 1955ம் ஆண்டு நூலாக வெளிவந்தது. ஈழத்தில் சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமையும் இவருக்குரியதாகும். ஈழத்தில் சிறுவர் இலக்கியம் வளரவேண்டும் என்பதற்காக கல்வி அதிகாரியாக பணியாற்றிய க.ச.அருள்நந்தி அவர்கள் முதன்முதலில் ஒரு சிறுவர் இலக்கியத்திற்கான போட்டியை நடத்தினார். இப்போட்டியில் சோமசுந்தரப்புலவர் பங்குபற்றி வெற்றியும் பெற்றார். இதனால் மக்கள் மத்தியில் புகழும் பெற்றார். இவரது காலத்திலேயே விபுலானந்த அடிகளாரும், சுவாமி ஞானப்பிரகாசரும் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1925ம் ஆண்டு \'உயிரிளங்குமரன்\' என்னும் நாடகத்தை எழுதினார். இந்நாடகத்தின் சிறப்பை பாராட்டிய இலங்கைத் தமிழ்ப் புலவர்கள் \'புலவர்\' என்னும் பட்டத்தை இவருக்குச் சூட்டினார்கள். இவர் அந்தாதி, கலம்பகம், வெண்பா, பதிகம் போன்ற பல இலக்கிய வடிவங்களை தந்துள்ளார். அதுமாத்திரமல்லமல் தில்லைஅந்தாதி, அட்டமுகில் கலம்பகம், கதிரைச்சிலேடைவெண்பா, கழையோடைவேற்பதிகம், விநாயகர் பாமாலை, மரதனோட்டம், நல்லை திருப்புகழ், நல்லையந்தாதி, நான்மணிமாலை, இலங்கைவளம், தாலவிலாசம், தந்தையார் பதிற்றுப்பத்து, நாமகள் புகழ் மாலை, முருகன் பாமாலை, சுகாதாரக் கும்பி போன்று சுமார் 15000 பாடல்களை (செய்யுள்கள்) இயற்றியுள்ளார். ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று \'தங்கத்தாத்தா\' என செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கி.பி. 1953ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி மண்ணுலகை விட்டுப்பிரிந்தார். இவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் இவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும் |
சிறுவர் இலக்கிய முன்னோடியான நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
Monday 1 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment